பீர்க்கங்காய் பாசிப்பருப்புக் கூட்டு|peerkangai paruppu kootu samyal in tamil
தேவையான பொருள்கள் –
பீர்க்கங்காய் – 150 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
சாம்பார் பொடி – 2 மேஜைக்கரண்டி )
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 1
காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
அரைக்க –
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
தாளிக்க –
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் நறுக்கியது – 1/4 பங்கு
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை –
கடாயில் பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் காயம், மஞ்சள்தூள் சேர்த்து பருப்பு முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
பீர்க்கங்காயை தோலுரித்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பீர்க்கங்காயில் நீர் சத்து இருப்பதால் 2 நிமிடத்தில் வெந்து விடும்.
வெந்தவுடன் சாம்பார்பொடி சேர்த்து 1 நிமிடம் கிளறி அதனுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும்.
கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பீர்க்கங்காய் பாசிப்பருப்பு கூட்டு ரெடி.
இந்த கூட்டை ப்ளைன் சாதத்தில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். புளிக்குழம்பு சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்